புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10 மக்களமைப்பை பலமாகக் கட்டியெழுப்பும் முகமாக தொடர்ச்சியாக கிராமங்கள் தோறும் அரசியல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. யாழ் மாவட்டத்தில் செயற்பட்ட அனைத்து உதவி அரசாங்க அதிபர் பிரிவு அமைப்பாளர்களுமே இதற்காக கடுமையாக உழைத்து வந்தனர். புதிய அங்கத்தவர்களை அமைப்புடன் இணைத்தல், கிராமங்கள் தோறும் அமைப்பு கமிட்டிகளை உருவாக்குதல் என்று தொடர்ச்சியாக செயல்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இத்தகைய அமைப்புக்களை உருவாக்குவதென்பது அவ்வளவு இலகுவாக நடைபெற்றிருக்கவில்லை. அரச படைகளின் தேடுதல் வேட்டைகளும், கெடுபிடிகளும், அன்றாட நிகழ்வாக இருந்த காலகட்டம் அது. அத்துடன் ஏனைய விடுதலை போராட்ட அமைப்புகளின் எதிர்ப்புகளும், சவால்களும் நாம் செல்லும் கிராமங்கள் தோறும் இருந்து வந்தது. இவற்றுக்கெல்லாம் முகம் கொடுத்த அதேவேளை, இத்தகைய எதிர்ப்புக்களையும், சவால்களையும் முறியடித்தே மக்கள் அமைப்பை உருவாக்க முடிந்தது.